இலங்கையின் வெவ்வேறான இரு பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் மௌலவி (மதபோதகர்) ஒருவர் மற்றும் பௌத்த பிக்கு ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறக்காமத்தில் 14 வயதுச் சிறுமி வன்புணர்வு
அம்பாறை, இறக்காமம் (எரகம) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரைத் தீவிர பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில், இக்குற்றச்செயலுக்கு ஆதரவளித்து உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய நபரொருவர் மே மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இக்குற்றச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியிருந்த நிலையில், சட்டத்தரணி ஒருவர் ஊடாகக் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ்வாறு நீதிமன்றத்தில் சரணடைந்த முதன்மைச் சந்தேகநபர், இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ‘மௌலவி’ ஆவார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரும் வரும் ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியில் 15 வயதுச் சிறுமி வன்புணர்வு
இதே போன்றதொரு கொடூரச் சம்பவம் கண்டி, பஹிரவகந்த பகுதியிலும் பதிவாகியுள்ளது. 15 வருடங்களும் 10 மாதங்களும் வயதுடைய சிறுமி ஒருவரை, அவரின் தந்தையின் சகோதரர் (சிறிய தந்தை) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் கண்டி பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில், பஹிரவகந்த பகுதியில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 25 வயதுடைய பௌத்த பிக்குவான முதன்மைச் சந்தேகநபர் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்குற்றச்சம்பவத்திற்கு ஆதரவளித்து உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், பஹிரவகந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரும் அன்றைய தினமே கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பிக்கு மற்றும் சந்தேகநபரான பெண் ஆகிய இருவரும் மே மாதம் 21 ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர், சந்தேகநபரான பிக்குவை ஜூன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரான பெண் தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.



