இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இறக்குவானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் நேற்று வெள்ளிக்கிழமை (21) இறக்குவானை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர் கலஹிட்டிய பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்றிருந்த மகன் இரவு வீடு திரும்பியபோது, தனது தாய் தலையில் பலத்த இரத்தக் காயங்களுடன் வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பான நீதவான் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

