சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பொலிஸ் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத நபர்கள் சிறுவர்களைத் தங்களிடம் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு விளையாட்டுப் பொருட்களை வழங்கி நம்பிக்கை பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான உணவுப் பொருட்களில் போதைப்பொருட்கள் அல்லது மயக்கமடையச் செய்யும் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், அதனை பயன்படுத்தி சிறுவர்களைக் கடத்திச் செல்வதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ குற்றவாளிகள் முயற்சிக்கக்கூடும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.
இதனால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக விழிப்புணர்வுடனும் தொடர்ச்சியான கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அறிமுகமற்ற நபர்களிடமிருந்து எந்தவொரு உணவுப் பொருளையோ பரிசுப் பொருளையோ பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதை சிறுவர்களுக்கு தெளிவாகக் கற்பிப்பதுடன், அவர்கள் வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் உரிய கண்காணிப்பை மேற்கொள்வதும் அவசியம் என இலங்கை பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

