மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான ‘குடு அஞ்சு’ என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரான 54 வயதான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் இரத்மலானை பகுதியில் ‘குடு அஞ்சு’வின் நெருங்கிய சகா ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

