கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டறியும் வகையில், கந்தளாய் தலைமையகப் பொலிஸாரால் விசேட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) இரவு கந்தளாய் – கண்டி பிரதான வீதியின் வெலிங்கடன் சந்தியில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், சுமார் மூன்று மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியவர்கள், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் மற்றும் எதிரே வரும் வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக வெளிச்சம் கொண்ட அல்லது அனுமதியற்ற விளக்குகளைப் பொருத்தி வாகனம் செலுத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறிய பலருக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

