கந்தளாய் – சமீபகாலமாக நவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா வலய மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தளாய் குளம், தற்போது சில பொறுப்பற்ற நபர்களின் செயல்பாடுகளால் மாசடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
அழகுபடுத்தப்பட்டு வரும் கந்தளாய் குளக்கரை மற்றும் அதனைச் சார்ந்த வீதியோரங்களில், அடையாளம் தெரியாத நபர்களால் மூட்டை மூட்டையாக குப்பைகள் மற்றும் கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் மில்லியன் கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைபாதைகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல நவீன வசதிகளுடன் கந்தளாய் குளக்கரை அண்மையில் மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தினசரி நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.
எனினும், வீதியோரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் மற்றும் அவற்றிலிருந்து வீசும் துர்நாற்றம் காரணமாக, இப்பகுதிக்கு வரும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் வகையில் போதுமான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், சிலரின் பொறுப்பற்ற செயல்களால் இந்நிலை தொடர்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, குப்பைகளை தினசரி அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், குளக்கரை மற்றும் அதனைச் சார்ந்த வீதியோரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

