கல்கிசை பகுதியில் இடம்பெற்ற ஒரு கோடியே 41 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 18 ஆம் திகதி வீடொன்றை உடைத்து 14,100,000 ரூபா (ஒரு கோடியே நாற்பத்தொரு இலட்சம் ரூபாய்) பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (6) தெஹிவளை பகுதியில் இரண்டு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் ஹட்டன் – பத்தனை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் 8 ஜோடி தோடுகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு வளையல், 10 தங்கச் சங்கிலிகள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 28, 46 மற்றும் 53 வயதுடைய பெண்களும், ஹட்டன் – பத்தனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

