குடும்ப முரண்பாட்டைத் தீர்த்துக்கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்ட நபரால் ஏற்பட்ட மின்சார சபையின் நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கம்புருபிட்டிய பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கம்பமொன்றில் ஏறி குறித்த நபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெய்யாந்தர, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களை பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து அவர் மின்கம்பத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர் பொலிஸார் அவரைக் கைது செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, அவரை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 24ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நபர் மின்கம்பத்தில் ஏறியதன் காரணமாக மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட்டு அறிக்கையிடுமாறு மாத்தறை பிரதான நீதவான், கம்புருபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரூ.201,059.90 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வழக்கை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

