அரச புலனாய்வுச்சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடைகள் இன்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இன்று (17.06.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சுரேஷ் சலேயின் தற்போதைய உடல்நிலை மற்றும் சிஐடி விசாரணைகள் குறித்துப்இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, சுரேஷ் சலேயைச் சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, எல்லோர் முன்னிலையிலும் அவரை நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வளவு காலமாக மறுத்து வந்த அதிகாரிகள், தற்போது இதனை ஒப்புக்கொண்டுள்ளதாக மனோரி சலே குறிப்பிட்டார்.
சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுரேஷ் சலே, உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ள மறுத்து வருவதால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மிக மோசமடைந்து வருகின்றது. அவரால் தற்போது அமர்ந்திருக்கவோ அல்லது பேசவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கைகளில் செலுத்தப்பட்டிருந்த ஊசிகள் காரணமாக கைகள் வீங்கியதை அடுத்து, அவை தற்போது அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர்கள் சிறு துளிகளாக திரவ ஆகாரங்களை வழங்கி, அவரது உயிரை எப்படியோ தக்கவைத்து வருவதாக அவரது மனைவி கவலை வெளியிட்டுள்ளார்.

