நல்லாட்சி அரசாங்கத்தின் போது பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதற்கு, ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்த அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கையே காரணம் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறெனில் நல்லாட்சி காலத்தில் காணப்பட்ட ஊழல் ஒழிப்புக்குழுவில் அங்கம் வகித்திருந்த அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலர், ஊழல் ஒழிப்புப் பணிகளைத் திறம்பட முன்னெடுக்க பூஜித் ஜயசுந்தரவையே காவல்துறை மா அதிபராக நியமிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டு, முடியுமாயின் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திற்குச் சென்று நேரடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச, அவர்களுக்கு இடையே நெருங்கிய அரசியல் தொடர்பு நிலவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஏறிப் பிரசாரம் செய்ததன் மூலம் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்குப் பூரண அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
எனினும், பூஜித் ஜயசுந்தர அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாததால் அத்தகைய பாதுகாப்பு எதுவுமே அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார்.

