ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி இன்று (31) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றியவராவார்.
சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட சிவிலியனுக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

