கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட பரபரப்பான கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், சந்தேகநபர் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, ஹொரம்பாவ – கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பெண்களிடம் பெருமளவு பணம் மோசடி செய்ததுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான பல மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவரது மனைவிக்கும் இந்த மோசடி வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றம், புதுக்கடை நீதவான் நீதிமன்றம், திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமண வாக்குறுதியை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் பெற்றமை மற்றும் வாகன மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.
தேசிய அடையாள அட்டை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தரவுத்தள பரிசோதனைகளில், மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் பேலியகொட பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தலைமறைவாக உள்ள சந்தேகநபரையும் அவரது மனைவியையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

