இலங்கையைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், ஏனைய மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கரையோரங்களில் இருந்து புறப்படும் படகுகள் அல்லது மீன்பிடி கலன்கள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழையக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அப்பகுதிகளில் கடல் அதி-கொந்தளிப்பாக மாற வாய்ப்புள்ளதால் கரையோர மீன்பிடி நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமானவை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவ சமூகத்தினர் வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிப்பதுடன், கடற்றொழில் அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பாதுகாப்பு வழிகாட்டல்களைச் சரிவரப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

