யாழ்ப்பாணம் – நயினாதீவு கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலயத்தின் அதிபர் நடராசா மயூரனின் மகன் கஜவர்சன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்று சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடமை முடிந்து படகில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் கடலில் உயிரிழந்துள்ளார்.
அந்த துயரச் சம்பவத்தின் சோகத்தின் மத்தியில், அவரது மகன் கஜவர்சன் பெற்றுள்ள 9A பெறுபேறு குடும்பத்திற்கும், பாடசாலைக்கும், சமூகத்திற்கும் ஆறுதலாகவும் பெருமையாகவும் அமைந்துள்ளது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
அதன்படி, வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீத மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். மொத்தமாக 566 மாணவர்கள் அனைத்து 9 பாடங்களிலும் (9A) சித்தி பெற்று சிறப்புச் சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை மட்ட தரவரிசையில் இம்முறை வடக்கு மாகாணம் 8ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 69.87 சதவீத தேர்ச்சியுடன் 9ஆம் இடத்தில் இருந்த நிலையில், இம்முறை மேலோங்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
எனினும், இப்பரீட்சையில் கலந்து கொண்ட மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

