நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த ஊழியரைத் அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்க, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (30) அனுமதித்தது.
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள தனது ‘மிஸ்டர் கொத்து’ உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டதன் மூலம் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விராஜ் விக்ரமநாயக்க,
செய்ய வேண்டிய கடமையைச் செய்யப் போய் அங்கே ஒரு தவறு நடந்துவிட்டதாகவும், ஒட்டுமொத்த இலங்கைக்கே அதுவொரு தவறான முன் உதாரணமாக அமைந்துவிட்டதாகவும் கூறினார்.
அது குறித்து தான் உண்மையிலேயே மன்னிப்பு கோருவதாகக் குறிப்பிட்ட அவர், எனது ஊழியருக்கு என்னால் ஏற்பட்ட விடயம் குறித்து எனக்கு வருத்தம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இது வேறு யாரோ திட்டமிட்டு நடத்திய சதி அல்ல, உண்மையில் எனது பக்கமிருந்த தவறினாலேயே இது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளைத் திருத்திக்கொண்டு, புதியதொரு பயணத்தைத் தொடங்க எதிர்பார்த்துள்ளதாகவும், இனிவரும் காலத்தில் புதியதொரு பாணியில் ‘புதிய கொத்து’ ஒன்றுடன் மீண்டும் வருவேன் என்றும் அவர் சிரித்தபடி ஊடகங்களிடம் தெரிவித்துச் சென்றார்.

