போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான இரண்டு சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி, பேலியகொடை பொலிஸாரால் ஜீப் வண்டியொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அந்த விசாரணைகளில், பேலியகொடை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, மஹர – கடவத்தை பகுதியில் 19.90 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள இருமாடி வீடு மற்றும் சிங்காரமுல்ல, களனி பகுதியில் 18 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள இருமாடி வீடு ஆகியவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு சொத்துக்களின் தோராய பெறுமதி தலா 500 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த பெறுமதி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
விசாரணைகளின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் இந்த சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு குறித்த சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Source: https://samugammedia.com/assets-worth-crores-acquired-through-drugs-have-been-seized-1789103686

