நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் குறைக்கவும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பேரழிவு நேரங்களில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதே முதன்மை இலக்கு. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொருத்தமான மீட்புத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பான மையங்களுக்கு மாற்றம்: ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களை எவ்வித தாமதமுமின்றி பாதுகாப்பான அமைவிடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களிலோ அல்லது உறவினர்களின் வீடுகளிலோ தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை தங்குதடையின்றி வழங்கிட வேண்டும். இதற்காகத் தேவைப்படும் நிதி ஆதாரங்களை உடனடியாகக் கோரிப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

