மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்கும் நோக்கில், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்திய அரசின் ரூ.600 மில்லியன் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) புதன்கிழமை காலை நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவராக கொழும்பு சுகாதார அமைச்சும், நடைமுறைப்படுத்தும் முகவராக வடக்கு மாகாண சபையும் செயற்படவுள்ளன.
இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த 2025 செப்டெம்பர் 9ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதுடன், மத்திய சுகாதார அமைச்சுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 2025 நவம்பர் 10ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டிடம் 77.3 மீற்றர் நீளமும் 34.3 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையவுள்ளது. தரைத்தளம் மற்றும் மேல்தளம் என இரு மட்டங்களைக் கொண்ட இக்கட்டிடத்தின் ஒவ்வொரு தளமும் 2,651.4 சதுர மீற்றர் பரப்பளவை கொண்டிருக்கும்.
இதன் மூலம் மொத்தம் 248 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி. ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் மேலும் ஒழுங்குபடுத்தி வழங்குவதற்கும் இந்தத் திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும்.
அடிக்கல் நடும் நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்து அடிக்கல்லை நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து நினைவுப் பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வின் போது நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவமனை அத்தியட்சகர், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

