Courtesy: Aadhithya
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் (R. Sampandhan) இழப்பு இலங்கை அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய இழப்பு என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் (V.S. Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“அரசியல் வரலாற்றில் 6 தசாப்தங்களாக மக்களின் நலனுக்காக பாடுபட்ட பெரும் தலைவர் இரா.சம்பந்தன்.
ஈடு செய்ய முடியாத இழப்பு
இவர் இலங்கை மக்கள் மாத்திரமின்றி உலக மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு மாபெரும் தலைவர். தமிழனத்தின் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென ஓய்வின்றி பாடுபட்டவர்.
நீண்டகாலமாக திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தாலும் மலையக மக்கள் மீதும் மலையக மக்களின் நலனிலும் அக்கறை கொண்டவர்.
இவரின் இழப்பு இலங்கை அரசியல் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரின் இழப்புக்கு மலையக மக்கள் சார்ப்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் கண்ட கனவுகளை அவரை தொடர்ந்து வரும் தலைவர்கள் நனவாக்க செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.