Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர், விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் முக்கிய பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா (Nalin Bandara Jayamaha) வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அண்மைக்கால நடவடிக்கைகள் பெரும் விளம்பரத்தைப் பெற்றுள்ளமை குறித்தே நளின் பண்டார ஜயமஹா இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்
கடுமையான இயற்கை பேரழிவால் பாதிப்பு
பிரதமர் அமரசூரிய தானே பல்பொருள் அங்காடிக்கு சென்றதாகவும், ஜனாதிபதி திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நிதியமைச்சுக்கு நடைபயணமாக சென்றதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
நாடு ஒரு கடுமையான இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் பிரதமர், தமது நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பல நிறுவனங்களை அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எனவே நிகழ்ச்சியை நடத்தி நேரத்தை வீணடிப்பதை விட இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று நளின் பண்டார கோரியுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம்
ஜனாதிபதி திஸாநாயக்க, நடைபயிற்சி மூலம் எதனையும் செய்ய வேண்டியதில்லை, அவர் உலங்கு வானூர்தியை பயன்படுத்தி கூட தனது நேரத்தை நிர்வகிக்க வேண்டும் என்று நளின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பத்தாவது நாடாளுமன்றத்தின் சம்பிரதாய திறப்பு விழாவில் ஜெய மங்கள கீதம் பாடப்படாமையானது, அண்மைய வெள்ளத்துக்கான தீய சகுனமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஒதுக்கியுள்ள 1 பில்லியன் ரூபாய் போதுமானதாக இல்லை.
முறையான நிவாரணம் வழங்க குறைந்தபட்சம் 20 பில்லியன் தேவைப்படுகிறது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.