சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உருவாக்க உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தமது
சுயேட்சை குழுக்கு வாக்களிக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபையில்
சுயேட்சை குழுவாக போட்டியிடும் அதன் தலைவர் முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் நேற்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“எங்களுடைய மண், மக்கள் நலனை பிரதான இலக்காக கொண்டு நாம் வரித்துக் கொண்ட தமிழ்த் தேசிய பற்றோடு பிரதேச அபிவிருத்தியை பிரதான இலக்காக கொண்டு நாங்கள்
உள்ளூராட்சி சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.
சிறப்பான அபிவிருத்தி
சுயேட்சையாக களமிறங்கும் எமது குழுவில் தோட்ட வேலை செய்பவர்கள், ஏழை
கடற்றொழிலாளர்கள், கழிவு அகற்றும் தொழிலாளர்கள் உட்பட பல புத்திஜீவிகள் வேட்பாளராக
களம் காணவுள்ளனர்.
கட்சிகள் தங்களுடைய சுய இலாபத்திற்காக வேட்பாளர்களை நிறுத்தி அதனூடாக
வாக்குகளை அபகரித்து தங்களுக்கான சுய இலாபத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுவதன் ஊடாக எங்களுக்கு கிடைக்கின்ற ஆசனங்களை
பயன்படுத்தி சுதந்திரமான தீர்மானங்களை நாமே எடுத்து எங்களுடைய
பிரதேசங்களையும், வட்டாரங்களையும் சிறப்பாக அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.