எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்டு அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (K. Kodeeswaran) வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை (Ampara) திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபரம் குருகுல கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற பிரதேச
அபிவிருத்தி அரசியல் மற்றும் கலாசார நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பை
பாதுகாக்கின்ற தமிழ் மக்களை காட்டிக் கொடுக்காத ஒரு கட்சியென்றால் அது தமிழரசு கட்சி மட்டும் தான். அதனை தமிழ் மக்கள் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.
தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை
இன்று தேசிய மக்கள் சக்திக்காக வாக்கு கேட்டவர்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிப்பிரச்சினைகள் வட்டமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினை கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியாக எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியுமா..?
அவர்களால் முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினையை தமிழரசு கட்சியின் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர்
ஒருவரால் மட்டும் தான் பெற்றுக் கொடுக்க முடியும்.
எதிர்வரும் தேர்தல்
எனவே எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைக்கான
தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்களும் தமது சுயநலமான பிரிவினைகளை கைவிட்டு அம்பாறை மாவட்ட
தமிழர்கள் அனைவரும் ஒன்றுமையோடு தமிழரசு கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.
தமிழர்கள் எதிர்பார்க்கின்ற இலக்கை வெற்றி கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்கூட்டத்தில் முன்னாள் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர்கள் தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதி நிருவாகிகள் உயர் நீதிமன்ற சட்டத்தரணி கு.ஜெகசுதன் தொழிலதிபர் இந்துனேஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.