தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் கிழக்கு தமிழர்
கூட்டமைப்பாக போட்டியிடவுள்ளதாக கட்சியின்
தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்
தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12
உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும்
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மாவட்ட அரசாங்க அதிபரும்,தெரிவத்தாட்சி அதிகாரியுமானஜே.ஜே.முரளீதரனிடம் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.
வேட்பு மனுக்கள் தாக்கல்
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான
சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையிலும் வேட்பு மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு
மாகாண ஆளுனர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் வேட்பு மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோன்று ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன் ஈ.பி.டி.பியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா
தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன் தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில்
11 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.