உள்ளூராட்சி சபை தேர்தல் 2025இற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் திகதி வரை
இடம்பெற்றிருந்தது.
இதற்கமைய நாடு முழுவதும் பல கட்சிகளினதும், சுயேட்சை
குழுக்களினதும் வேட்புமனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு ஜனநயாக தேசிய கூட்டணி (தபால்
பெட்டி) கட்சி சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவும்
நிராகரிக்கப்பட்டிருந்தது.
விசாரணை
இந்நிலையில், இக்கட்சியின் தேர்தல் முகவரும், கூட்டணி கட்சியான சிறிரெலோ
கட்சியின் செயலாளருமான ப.உதயராசா அவர்களின் தலைமையில் கொழும்பு உயர்
நீதிமன்றில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நீதிபதிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளைய தினம் (27.03.2025)
விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதும் வன்னி தேர்தல் மாவட்டத்தில்
குறித்த இதே கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றில்
வழக்கு தாக்கல் செய்து குறித்த வழக்கு விசாரணையின் பின்னர் மீளவும் வேட்புமனு
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.