தமிழரசு கட்சி அநுரகுமார அரசாங்கத்துடன்
இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பியினது தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர் என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா
தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சிங்கள பேரினவாதத்தை…
மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து திட்டம் தீட்டி தொடர்ச்சியாக
செயற்பட்டு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கங்களை விட இப்போது அநுர குமார
திசநாயக்கா தலைமையில் இயங்கி கொண்டிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி என
அழைக்கப்படுகின்ற ஜே.வி.பி அரசாங்கம் மிக தீவிரமாக இராஜதந்திர ரீதியாக
செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஜே. ஆர் ஜெயவர்தன, பிறேமதாச, மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா யார் என்பது
மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது வந்திருக்கின்ற இந்த ஜனாதிபதி இனவாதத்தின்
அழகு முகமாக தமிழ் மக்களை வளைத்துப் போடலாம் என திட்டம் தீட்டி செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றார்.

கடந்;த பொது தேர்தலிலே சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஆட்சிக்கு வந்த
இவர்கள் தமிழ் மண்ணில் தேர்தல் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி
சில ஆசனங்களை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையலே உலகத்துக்கு பாருங்கள்
உள்ளூராட்சி முடிவுகளை நாங்கள் கணிசமான ஆசனங்ககளை வென்றிருக்கின்றோம் என
காட்டமுடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களது வேட்பாளர்களை தமிழ் மாநிலம்
முழுவதும் நிறுத்தியுள்ளனர்.
இலங்கையின் முதல் பிரதமர் டட்லி சேனநாயக்கா, சேர்ஜோன் கொத்தலாவ மற்றும்
சிங்கள சட்டத்தை கொண்டு வந்து இந்த நாட்டிலே தமிழர்களுக்கு அடிபோட்டு உதைபோட்ட
பண்டாரநாயக்கா அரசாங்கம் அதன் பின்னர் ஆட்சி செய்த அனைவரும் பௌத்த சிங்கள
பேரினவாதத்தை முழு இலங்கை தீவையும் அரசியல் ரீதியாக கொண்டு வருகின்ற ஒரே
நிகழ்சி நிரலில் செயற்பட்டனர்.
சுமந்திரன் தமிழினத்தின் சாபக்கேடு
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் சமீபத்தில்
நாடாளுமன்றத்தில் இந்த தேசிய மக்கள் சக்தியில் தமிழர்களாக போட்டியிட்டு
தெரிவாகிய எம்.பிக்களை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை
அவர்கள் குறைகளை அல்லது கோரிக்கைகளை நேரடியாக அரசாங்க தரப்பிடம்
சமர்ப்பிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

எனவே அவர்களுக்காக நாங்கள் அவர்களுடைய
கோரிக்கையை அரசாங்கத்துக்கு எடுத்து சொல்ல வேண்டியுள்ளது என பேசினார் இது
எவ்வளவு வெட்ககேடு.
எமது மக்களுக்காக பேச வேண்டியவர்கள் இன்று தமிழர்களின் தேசிய அபிலாசைகளுக்கு
எதிரா செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிங்கள இனவாதிகளின் எடுபிடிகளான இந்த
ஜே.வி.பி தமிழ் எம்பிக்களுக்கு பேச்சாளர்களாக தமிழரசு கட்சி சில உறுப்பினர்கள்
இயங்கி கொண்டிருக்கின்றனர்.
சுமந்திரன்
தமிழினத்தின் சாபக்கேடு அவரை கொண்டு வந்த சிலர் இன்று உயிரோடு இல்லை
கடந்த தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் கூட தமிழரசு கட்சியை
தொடர்ந்து நாசப்படுத்தி கொண்டிருக்கின்றார் அவர் தமிழரசு கட்சியில் இருந்து
ஆட்டம் போடும்வரை நீங்களும் நாங்களும் எதையும் எதிர்பார்க முடியாது.
அந்த நிலைமை
மாற்றப்படக் கூடுமா என்பதை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தான் தீர்மானிக்க
வேண்டும். ஆனால் தமிழரசு கட்சிக்கு எதிராக இந்த தேர்தலிலே வாக்குகள் விழுமாக
இருந்தால் அந்த நிலைமை மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



