முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை
இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்தொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நெடுந்தீவுக்கு நேற்றைய தினம் (07.18.2025) சென்றிருந்த அமைச்சர் மக்கள்
அமைப்புக்கள் மற்றும் கடற்றொழில் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின்
பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின்னர் நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி
திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே
முடியாது.
ஊழல் அரசியல்
ஊழல் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவே நாம் ஆட்சிக்கு வந்தோம்.
அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதற்கமைய ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள்
தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.
நாம் சட்ட விவகாரத்தில் தலையிடவில்லை. சட்டம் தனக்குரிய வகையில் தனது கடமையை
நிறைவேற்றும்.
அதேபோல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிச்சயம் கட்டம், கட்டமாக
நிறைவேற்றுவோம்.
இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஐந்தாண்டு
காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒரே இரவில் நிறைவேற்றிவிட வேண்டும்
என சிலர் நினைக்கின்றனர்.
அது தவறு.
அதேவேளை, வறுமையின் கோரப்பிடிக்குள் இருந்து மக்களை மீட்பதற்காக சமூக சக்தி
வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே எமது இலக்கு. அந்த சமூக மேம்பாட்டு
திட்டத்தில் வறுமை நிச்சயம் ஒழிக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள்
வகுக்கப்பட்டு வருகின்றன” என மேலும் தெரிவித்தார்.