பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியில் இருந்து நீக்கப்பட்டு பிரதமராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மே மாதம் குறிப்பிட்டிருந்தார், விரைவில் அமைச்சரவை மாற்றம் ஒன்று நடைபெறுமென.
நான் அது தொடர்பில் எனது யூடியூப் தொலைகாட்சியிலும் குறிப்பிட்டிருந்தேன்.
ஹரிணிக்கு எதிரான செயற்பாடு
ஹரிணியை நீக்குவது தொடர்பில் உட்கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி ஆறு காரணங்களை சுட்டிக்காட்டி ஏன் அவரை நீக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வாக்கு வங்கியின் பெரும் பகுதி தேசிய மக்கள் சக்தியின் உடையது, ஐரோப்பிய தூதரங்கங்களின் இணைப்புச் செயலாளர் பிரதமர், அரசாங்கத்தில் உயர் குடியை பிரநிதிப்படுத்துவதும் அவரே மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளருமாவார் ஆதலால் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஜே.பி.வியினர் பிரதமர் ஹரிணிக்கு எதிராக செயற்பட முனைகின்றனர்.
அவருக்கு பெரும் அழுத்தங்களை கொடுத்து அவர் பதவியில் இருந்த விலக செய்யும் நிலைக்கு தள்ளும் செயற்பாடகவே இவை காணப்படுகின்றன.
“சுப்ரீம் சட் ” தொடர்பிலான விடயத்தில் பிதமரின் கூற்றை அமைச்சர் வசந்த சமரசிங்க பிழையென கூறியதும் அதன் முதல் படியாகலாம்” என்று தெரிவித்துள்ளார்.