இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு தான் முட்டாள் அல்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் குறைகள்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “எதிரணி தரப்பில் உள்ள கட்சிகளின் அரசியல் நடவடிக்கையானது நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையவில்லை.
அதனால் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த முகாமில் இருந்து வெளியேறிவிட்டேன்.

எனவே, மீண்டும் எதிரணி கூட்டணிக்குள் செல்லும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. எதிரணி தரப்பில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என பிரார்த்திக்கின்றேன்.
நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மீண்டும் ஆணை வழங்கக்கூடாது.
இதேவேளை, தமது தரப்பிலுள்ள குறைகளை ஆளுங்கட்சியும் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்” எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

