வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் தூரநோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச
சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள
வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் சம்பவ இடத்திற்கு
விரைந்த கடற்தொழில் அமைச்சர், அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு உடனடியாக மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு
பணித்துள்ளார்.
பெரும் போர்
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகின்றது அது
நீருக்கான போராக உள்ளது இதற்கு காரணம் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர்
தான்.
வழமையாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து ஓடும் நீர் கோப்பாய் பிரதேச
சபை ஊடாக வடிந்து கடல்நீரேரியை சென்றடையும் இது தான் வழமை.

இம்முறை நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் எங்களுடைய பிரதேசத்திற்குள் வர
கூடாது என அதனை மண் அணை போட்டு தடுத்து போர் பிரகடனத்தை அறிவித்துள்ளார்
கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்.
இதொரு அருவருப்பான செயல், வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில்
பிரச்சனையை ஏற்படுத்த முனைகின்றார், தூர நோக்கற்று செயற்படும் இந்த
அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருத்தக்கது இதொரு மனவருத்தத்திற்கு உரிய
விடயமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.



