டித்வா சூறாவளியை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்த விமர்சனங்களை எதிர்கொண்ட
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தயார்நிலை மற்றும் நிவாரண விநியோகத்தில்
முறையான இடைவெளிகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் இலங்கையின் பேரிடர் முகாமைக் கட்டமைப்பு மற்றும் காலநிலை
மீள்தன்மையை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரிவான திட்டத்தையும் அவர்
வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் தயார்நிலை
சூறாவளி பேரழிவு மற்றும் உயிர்களை காவு கொண்ட விதத்தை விபரித்துள்ள ஜனாதிபதி,
பாதுகாப்புப் படைகள், பொலிஸ், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சர்வதேச பங்காளிகள்
விரைவாக அணிதிரண்டதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் உள்ளூர் தயார்நிலை, நில பயன்பாட்டு அமுலாக்கம் மற்றும் நிவாரண
விநியோகத்தின் வேகத்தில் உள்ள பலவீனங்களை அவர் வெளிப்படையாக
சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு உதவிய நாடுகள்
இதேவேளை தமது அரசாங்கம் இந்த பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புவதாகவும், இதற்காக உண்மையான வளங்கள் மற்றும் சட்ட அதிகாரத்துடன் அதிகாரம் பெற்ற தேசிய
பேரிடர் மேலாண்மை அதிகாரசபை உருவாக்கப்பட்டுள்ளதாக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா,பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு உட்பட்ட நாடுகள் சரியான நேரத்தில்
இலங்கைக்கு உதவியதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

