உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுக்கு தெரிவித்துள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தில் காணி இல்லாவிட்டால் வடக்கு கிழக்கில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் காணிகளை பெற்றுத் தருவதாக அண்மையில் கண்டியில் மனோ கணேஷன் (Mano Ganesan) குறிப்பிட்டிருந்தார்.
நாங்கள் பார்த்துக் கொள்வோம்
மனோ கணேஷனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலே அர்ச்சுனா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அர்ச்சுனா, “மலையக மக்கள் எங்கள் இரத்த உறவுகள், அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டியது எமது கடமையாகும். அதனால் உங்களுக்கு மலையகம் வேண்டாம், வவுனியா, யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

மனோ கணேஷனின் தந்தை ஒரு நடிகர் என்பதால் அவர்களுக்கு பரம்பரை சொத்து இருக்கிறது தானே. அதை விற்று அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள். பின்னர் நாங்கள் புலம்பெயர் தமிழர்களிடம் காணிகளை பெற்றுத் தருகிறோம்.
புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்தில் தமது உறவுகளை இழந்து தப்பிப் பிழைத்த ஒரு சிலரே புலம் பெயர்ந்து கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். அதனால் நீங்கள் முன்னுதாரணம் காட்டுங்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

