ராஜபக்ச குடும்பத்தினர் இந்த நாட்டில் ஒன்பது வருடங்களில் 15 பில்லியன் அமெரிக்க டொலரை களவாடியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் எடுத்த கணக்கெடுப்பில் ஒரே குடும்பத்திலுள்ள நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு மகன்மார்கள், ஒரு மச்சான் இந்த நாட்டில் 2006 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 2014 கடைசி வரை பாரிய திட்டங்களில் மட்டும் பல கோடி ரூபாவை கையூட்டாக பெற்றுள்ளனர். இதனாலேயே நாடு வங்குரோத்தானது.
பாரிய திட்டங்களில் பெற்றுக் கொண்ட பணம்
நான் பதவியில் இருந்து விலகுவதற்கு முன் பல அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாரிய ஆறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தேன். அதில் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் காணப்பட்டன.
இந்த திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் கடன் வழங்குவதாக ஒத்துக் கொண்டிருந்தன. ஆனால் சீனா தான் முக்கியத்துவம் வழங்கியிருந்தது. அப்போது நாம் வெளிநாட்டு கடன்களை 1 வீதம் வட்டிக்கே பெற்றுக் கொண்டோம்.

ஆனால் ராஜபபக்ச காலத்தில் 6 தொடக்கம் 9 வீதம் வட்டிக்கு கடன் பெறப்பட்டுள்ளது. அதில் சில வீதங்கள் அவர்களின் கணக்குகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எந்த அரசியல் தலைவரும் அவ்வாறான ஒரு வட்டிக்கு கடன் வாங்கமாட்டார்.
கைவிட்டுச் சென்ற நிறுவனங்கள்
அத்தோடு சீனா எங்களின் பாரிய ஆறு அபிவிருத்தி திட்டங்களுக்கு கடன் வழங்கியது. அப்போது நான் செல்வதற்கு முன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் வேலைகளை ஆரம்பித்தேன்.
அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச இந்த திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன நிறுவனத்தை வரவழைத்து, ஒன்றும் கேட்காமல் இந்த திட்டத்திற்கு 280 மில்லியன் செலவழிக்கப்படுகிறது தானே, எனக்கு 140 மில்லியன் அதாவது ஒரு திட்டத்திற்கு தேவை என கேட்டுள்ளார்.
அவர்கள் அவ்வளவு பணம் தரமுடியாது என கூற, வெளியில் செல்லுங்கள் என கூறியுள்ளார். அதாவது நாங்கள் கொண்டுவந்த சிறந்த ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் நாட்டை விட்டு சென்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

