முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச நியமனம் வழங்கிய 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தற்போதைய அரசாங்கம் அநீதி இழைப்பதாக இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணி புரிந்து
வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு
செய்து வருகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (23) மட்டக்களப்பு மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தலைமையில்
பட்டதாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
சட்டரீதியான நடவடிக்கை
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன், “கடந்த 6 வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு
ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றோம்.

அந்தவகையில், கடந்த அரசாங்கத்தால்
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியாக நடவடிக்கை கடந்த வருடம்
மேற்கொண்டிருந்தோம்.
அந்தவகையில் கடந்த அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை
ஆற்றிக் கொண்டு வருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரு
இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரு தீர்வை தர இருந்தது.
இருப்பினும், ஆட்சி மாற்றத்தின்
பிற்பாடு தற்போதைய அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை
ஆற்றிக் கொண்டு வருகின்ற பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க பல
விடையங்களை கூறிக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் பிரதமர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
அனைத்து வழக்குகளும் நிறைவுற்றுள்ளன. எனவே இவர்களை போட்டிப்பரீட்சை மூலம்
உள்வாங்க அனைத்து ஏற்பாடும் இடம்பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.

