பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்துவந்த இருவர் பொதுமக்களின் தகவலுக்கமைய நேற்று அல்லைப்பிட்டி பகுதியின் இருவேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர் .
சுமார் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே நேற்று ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவிக்கையில் –
வேலணை பிரதேசத்தில் குறித்த இருவரும் மாடு திடுட்டு, களவு மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல் கிடைக்கப்பெற்று வந்தது.
இன்நிலையில் நேற்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தலைமையில் முன்னெடுக்கப்பட விசேட நடவடிக்கையின்போது, அல்லைப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து ஒருவரும் அல்லைப்பிட்டி தேவாலய பகுதியில் வைத்து ஒருவருமாக இருவர் கைது செய்துப்பட்டனர்.
மேலதிக விசாரணையின்பின் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே தீவகப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு செயற்படும் நபர்களது தகவல்களை அச்சமின்றி வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிசார் கோரியுள்ளனர்.

