அமெரிக்காவின் கொலராடோவின் போல்டர் பகுதியில், நேற்று நடந்த கொடூரமான தாக்குதலை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளவே முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாலஸ்தீனத்தை விடுவிப்போம் என்று கூச்சலிட்ட ஒருவர் மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியதில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், “கொலராடோவின் போல்டர் பகுதியில், நேற்று நடந்த கொடூரமான தாக்குதலை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.
பைடனின் திறந்த எல்லை கொள்கை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் அபத்தமான திறந்த எல்லைக் கொள்கை மூலமே குறித்த தாக்குதல்தாரி அமெரிக்காவிற்குள் வந்துள்ளார்.

இது நம் நாட்டை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. குறித்த நபர் ட்ரம்ப்’ கொள்கையின் கீழ் வெளியேற வேண்டும். பயங்கரவாதச் செயல்கள், சட்டத்தின் முழு அளவிற்கும் தண்டிக்கப்படும்.
நமது எல்லைகளை நாம் ஏன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், சட்டவிரோத, அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதிகளை நமது தாயகத்திலிருந்து நாடு கடத்த வேண்டும் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
இந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொலராடோவின் போல்டரின் சிறந்த மக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள்
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் யூத ஆதரவுப் பேரணியில் நடாத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 1, 2025) போல்டர் நகரில் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக “ரன் ஃபோர் தேர் லைவ்ஸ்” (Run For Their Lives) என்ற தன்னார்வக் குழுவினர் நடத்திய வாராந்திர பேரணியின் முடிவில் இந்தத் தாக்குதல் நடந்தது.
முகமது சப்ரி சோலிமன் (45 வயது) என்ற நபர், கையால் செய்யப்பட்ட தீச்சுவாலை கருவி மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலின் போது “பயங்கரவாதிகள் ஒழிக!” மற்றும் “பாலஸ்தீனம் விடுதலை அடையட்டும்!” போன்ற கோஷங்களை அவர் எழுப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் காணொளிகளிலும் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலின் போது காயமடைந்தவர்களில் 52 முதல் 88 வயதுக்குட்பட்ட நான்கு பெண்களும் நான்கு ஆண்களும் அடங்குவர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திலேயே சந்தேக நபரான முகமது சப்ரி சோலிமன் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) “இலக்கிடப்பட்ட பயங்கரவாதச் செயல்” மற்றும் “வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றம்” என தெரிவித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அவருக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அளவிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீப காலமாக அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








Source: https://tamilwin.com/article/colorado-attack-trump-blames-bidens-policy-1748892036

