பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு வேகமாக வலுப்பெற்று வருவதாகவும், அதன் தாக்கத்தால் இலங்கையில் முதலில் அதிக வெப்பம் மற்றும் வரட்சி நிலவிய பின்னர், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பசிபிக் பெருங்கடலின் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை (SST) மற்றும் Nino 3.4 Index தொடர்ந்து உயர்வைக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச்–மே 2026 காலப்பகுதியில் +0.48°C ஆக இருந்த வெப்பநிலை, மே மாதத்தில் +0.94°C ஆகவும், ஜூன் 29ஆம் திகதியளவில் +1.9°C ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாற்றங்கள், தற்போது வலுவான எல் நினோ நிலை உருவாகியிருப்பதையும், அது மேலும் தீவிரமடையும் சாத்தியம் இருப்பதையும் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையில் எல் நினோவின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது, இந்துப் பெருங்கடல் வெப்பச் சுட்டெண் (Indian Ocean Dipole – IOD) செயல்படும் விதத்தைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
பல காலநிலை மாதிரிகளின் ஒருங்கிணைந்த கணிப்புகளின் (Multi Model Ensemble) அடிப்படையில், எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையைச் சூழவுள்ள இந்துப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் +1.6°C வரை உயரக்கூடும் என்றும், ஆகஸ்ட் மாத இறுதியில் அது +2.6°C வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை மாதத்தின் பிற்பகுதி முதல் செப்டம்பர் மாத இறுதி வரை நாட்டில் அதிக வெப்பநிலை மற்றும் வரண்ட காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ஆவியாக்கம் மற்றும் நீரிழப்பு காரணமாக பல பகுதிகளில் வறட்சி நிலை உருவாகும் அபாயமும் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இந்த ஆண்டின் எல் நினோ தாக்கத்தில் இலங்கை அதிகம் பாதிக்கப்படக்கூடியது வரட்சியால் அல்ல, மாறாக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினாலேயே என காலநிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 டிசம்பர் முதல் 2027 ஜூலை வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் எல் நினோவின் உச்ச தாக்கம் உணரப்படக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதத்தின் பிற்பகுதியில் இருந்து சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும். அதன் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலப்பகுதிகளின் வளி வெப்பநிலை அதிகரிக்கும்.
ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெப்பநிலை 2.8 பாகை செல்சியஸ் இனை விட கூடுதலாக அதிகரிக்கும். ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து மழை கிடைக்க தொடங்கி பின்னர் படிப்படியாக அதிகரிக்கும். இந்நிலைமை நவம்பர் மாத இறுதி வரை நிகழும்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகளில் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய மழைவீழ்ச்சி நிகழ்வுகள் பதிவாக வாய்ப்புள்ளன.
கிழக்கு மாகாணத்தின் கரையோரங்கள் தனித்து வங்காள விரிகுடாவாக காணப்படுவதனால், வங்காள விரிகுடாவில் காணப்படும் இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்(IOD) எல்நினோவின் பாதிப்பினை தீர்மானிக்கும்.
ஆனால் வடக்கின் நிலைமை குழப்பமானதாக அமையும். ஏனெனில் வடக்கு மாகாணத்தின் கிழக்கு எல்லை வங்காள விரிகுடா… மேற்கு எல்லை அரபிக்கடல். இரண்டுமே வேறு வேறான தன்மை கொண்ட வெப்பச் சுட்டெண்ணைக் கொண்டவை. அதேவேளை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதிரெதிர் தன்மை கொண்ட சுட்டெண்களாகவே அமைபவை. உதாரணமாக அரபிக் கடலில் நேர்மறையான(Positive) இந்து சமுத்திர வெப்பச்சுட்டெண் அமைந்தால் வங்காள விரிகுடாவில் எதிர்மறையான (Negative) வெப்பச் சுட்டெண் அமையும்.
அதேவேளை நேர்மறையான வெப்பச் சுட்டெண் அரபிக்கடலில் நிகழ்ந்தால் அதன் செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் கனமழையைப் பொழிவிக்கும். ஆனால் வங்காள விரிகுடாவில் எதிர்மறையான வெப்பச் சுட்டெண் அமைந்தாலே அதன் செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் கனமழையைப் பொழிவிக்கும்.
இந்த இரண்டு வேறுபட்ட வெப்பச் சுட்டெண்ணும் எல்நினோவும் இணையும் போது ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்கு வழியமைக்கும். அது சமுத்திரத்திலும் நிலப் பகுதிகளிலும் அதிக வெப்பநிலையோடு கூடிய கடும் வரட்சியாகவோ அல்லது சமுத்திரப்பகுதியின அதிக வெப்பநிலையோடு கூடிய கடும் மழை வெள்ளமாகவோ அமையலாம்.
தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோவினால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் விவசாய பாதிப்பு ஏற்படும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பினால் மீன்பிடி நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.
இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலபோக நெல் விதைப்பு மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் செப்டெம்பர் வரையும் வரண்ட வானிலையும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதனால் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு பெரும் போக நெல் விதைப்பை மேற்கொள்வது சிறந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வரட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த நடவடிக்கை பிரதேசங்களின் குளங்கள், குட்டைகள் மற்றும் மோட்டைகளை தூர் வாரி அவற்றின் நீர்க் கொள்ளளவை அதிகரித்தல். இச் செயற்பாடு வெள்ள அனர்த்தங்களின் போது குடியிருப்புக்கள் மற்றும் விவசாய நிலங்களில் தேங்கும் வெள்ளநீர் குளங்களில் தேங்கவும், மழைகாலங்களில் கிடைக்கும் நீர் வீணாக கடலைச் சென்றடையாமல் குளங்களில் தேங்கி வரட்சிக் காலத்தில் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும்.
ஆகவே தற்போது உருவாகியுள்ள எல் நினோவை போதுமான திட்டமிடலோடு வெற்றிகரமாக எதிர்கொள்வதன் மூலம் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கலாம்.
உலக காலநிலை அமைப்பு மிகப்பெரிய அளவில் மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு தற்போது ஐரோப்பாவில் நிகழும் கடுமையான வெப்ப அலைகள் மிகச் சிறந்த உதாரணம். இன்றைய தினம் வரை பிரான்ஸ் நாட்டில் 1360 பேர் இந்த வெப்பநிலையினால் இறந்துள்ளனர். இன்றும் பல பகுதிகளிலும் 46°C இனை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், உருவாகியுள்ள எல் நினோ நிலைமையை எதிர்கொள்ள அரச துறைகள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பொதுமக்களுக்கு விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

