கடந்த காலத்தில் ராஜபக்சாக்கள்(rajapaksas) மீது போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோதிலும் அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அனைவரும் விடுபட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(slpp) மாத்தளை(matala) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட(Nalaka Bandara Kottegoda) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தேர்தல் பிரசார மேடைகளில் இன்று பலரும் நாட்டின் திருடர்களை கண்டுபிடித்து சட்டத்துக்கு முன் நிறுத்துவதாக பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த நல்லாட்சி காலத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களே இன்றும் அதை முன்னெடுத்து வருகின்றனர். இதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது போலியான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பல வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும் அனைத்து வழக்குகளிலிருந்தும் நாம் இன்று விடுபட்டுள்ளோம்.இவர்கள் சுயநலத்துக்காகவே செயற்பட்டார்கள்.
இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு
நாட்டின் வேலையற்ற இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு பத்தாண்டு வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.