இலங்கையில் இணைய நிதிமோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்படுகின்ற முதியவர்களுடன் போலியான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இணையக்குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வங்கி கணக்குகளில் பணமோசடி
வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் அவர்களது குற்றங்களுக்கு ஆதரவாக இலங்கையை சேர்ந்த பலரும் செயற்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையக்குற்றவாளிகள் முன்னரே தயாரிக்கப்பட்ட பல்வேறு மொழிகள், அழைப்பு உரையாடல்கள், குறுஞ்செய்தி பரிந்துரைகள் ஆகியவற்றை தொடர்புடைய மோசடிகளுக்கு பயன்படுத்துகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர மற்றும் முதியவர்களுடன் போலி உறவுகளை ஏற்படுத்தி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு வழிகளில் பணத்தை வைப்புச்செய்ய தூண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வரும் இணைய குற்றவாளிகள், கணக்கில் உள்ள பணத்தை இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் மூத்த விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/cybercriminals-scam-by-creating-fake-relationships-1729390428

