பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ. தர்சினி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து காணொளி ஊடாக ஆஜர்படுத்தப்பட்ட பிள்ளையான் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி, காத்தான்குடி மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும், கல்லடி பகுதியிலுள்ள காணி தகராறு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தொடரப்பட்ட வழக்குகளிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனது தாய் மற்றும் தந்தையை நேரில் சந்தித்துப் பேசுவதற்கான சிறப்பு அனுமதியை பிள்ளையான் தரப்பு கோரியிருந்தது. சிறை உணவுச் சோதனை அசௌகரியம்: சிறைச்சாலைக்கு எடுத்து வரப்படும் உணவுகள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால், உணவைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாக மன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி, சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக முறையான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டார்.

நீண்ட தூரப் பயணம் மற்றும் பாதுகாப்பு அச்சங்களைக் காரணம் காட்டி பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அரசுச் சட்டத்தரணிகள் பலத்த ஆட்சேபனை தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையிலேயே அவருக்குப் போதிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசுத் தரப்பு, இது தொடர்பான விரிவான அறிக்கையைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டது.
இவ்வழக்கில் சாட்சிய பதிவுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


