நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
மோசமான வானிலை
தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,

“உயர்தரப் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மையமும் இணைந்து 5ஆம் திகதி கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திட்டமிடப்படும். பொதுவாக ஓகஸ்ட் மாதம் குறைந்த மழைப்பொழிவு காணப்படும் காலமாகும்.
தென்மேற்கு பருவமழை
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இது தற்காலிகமான நிலைமை. 6, 7, 8 ஆகிய தினங்களுக்குப் பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பிறகே ஆரம்பமாக இருப்பதால், அதற்குள் இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்திருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஓகஸ்ட் 6ஆம் திகதிக்குப் பின்னர், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி அமைப்பின் தாக்கத்தால், இலங்கையில் மீண்டும் மழைப்பொழிவு ஓரளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Source: https://tamilwin.com/article/discussion-a-l-exams-amidst-adverse-weather-1785806162

