கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை என்பது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பரீட்சை என்பதால், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிக்கு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை நிலையக் கண்காணிப்பாளரின் சம்பள உயர்வு
இதற்கிடையில், இந்த முறை உயர்தர பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இதற்கமைய, உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பொறுப்புகளையும் தற்போதைய செலவுகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/kegala-scholarship-question-paper-issue-1786343819

