மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, ஓல்ட்டன் தோட்டத்தின் கிங்கோரா பிரிவிலுள்ள வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இன்று பிற்பகல் 2 மணியளவில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வனப்பகுதியில் சிறுத்தை சடலமாகக்காணப்படுவதைக் கண்டு, உடனடியாகத் தோட்ட முகாமையாளருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தோட்ட முகாமையாளர் மூலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமாரவிற்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவலைப் பரிமாறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லதண்ணி வனஜீவராசிகள் அதிகாரிகள், சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர். சுமார் 5 அடி நீளமும் 18 அங்குல உயரமும் கொண்ட இந்தச் சிறுத்தை எவ்வாறு உயிரிழந்தது என்பதைப் கண்டறிய, அதன் உடலை ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

