கிண்ணியா நகர சபையின் புதிய உதவி தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் என். சனாஸ் முகம்மது போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா நகர சபையின் உதவி தவிசாளராக பதவி வகித்து வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முகம்மது ஷரீப் அஸீஸ் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான தெரிவு இன்று (17) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.டி.எம். ராபி தலைமையில் நடைபெற்ற இத்தெரிவில், உதவி தவிசாளர் பதவிக்கு என். சனாஸ் முகம்மதுவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம்.எம். ரசாத் முகம்மட் முன்மொழிந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முகம்மது ஷரீப் அஸீஸ் அவரை வழிமொழிந்தார்.
உதவி தவிசாளர் பதவிக்கு வேறு எவரும் பெயர் குறிப்பிடப்படாத நிலையில், என். சனாஸ் முகம்மது போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.டி.எம். ராபி அறிவித்தார்.
இதனையடுத்து, கிண்ணியா நகர சபையின் புதிய உதவி தவிசாளராக என். சனாஸ் முகம்மது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எம். தாஹிர், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் ஏ. ஆர். எம். அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் எம். ஏ. அப்துல் ஹாதி உள்ளிட்ட பலர் பார்வையாளர் அரங்கில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

