நிலவும் எல்-நினோ நிலைமை காரணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ளும் வகையில், மின்கல சக்தி சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System) ஊடாக அதிகளவிலான மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக, டிசம்பர் மாதத்திற்கு முன்னர் 160 மெகாவோட் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, செப்டம்பர் மாதத்தில் 130 மெகாவோட் மற்றும் ஒக்டோபர் மாதத்தில் 10 மெகாவோட் மின்சாரத்தை மின்கல அமைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மன்னார் காற்றாலை மின்நிலையம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தால், மேலும் 50 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்கல அமைப்பின் மூலம் 250 மெகாவோட் மற்றும் 150 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்து, எதிர்வரும் எல்-நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொண்டு தொடர்ச்சியான மின்சார உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

