நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.மகிந்த சிறிவர்தன (Mahinda Siriwardena) இன்று (25) மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கும், இந்நாட்டில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் வெற்றிக்கும் இவர் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு மாற்று நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.
கடமைகளை பெறுப்பேற்றார்
இவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அபிவிருத்தியில் முதுகலைப் டிப்ளோமாவும் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும், மகிந்த சிறிவர்தன பெரும் பொருளாதார முகாமை, மத்திய வங்கி, அரச நிதி முகாமை, அரச கடன் முகாமை நாணயக் கொள்கை, நிதி நிரலாக்கம் மற்றும் கொள்கை ஆகிய துறைகளில் பல சர்வதேச பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்வில் திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Source: https://ibctamil.com/article/secretary-of-the-finance-ministry-resumed-duties-1727245717

