தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பில் தமிழக அரசின் நிலைப்பாட்டை மாற்றக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய மத்திய அரசிற்கு ஒத்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது.
இந்த நிலையில் அந்த நிலைப்பாட்டை மாற்றக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் (V. Urudhrakumaran) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்திற்கு தனது தார்மீக, அரசியல் மற்றும் சட்டபூர்வ ஆதரவை தமிழக அரசிடம் கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தெற்காசியப் பகுதியில் உள்ள தமிழர்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும்உரிமையும், கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின்படி, செப்டம்பர் 27-28 ஆகிய நாட்களில், விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை குறித்தான தீர்ப்பாய விசாரணைகள் இடம்பெற இருக்கின்றன.

இவ்விவகாரம் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரனினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகாலப் பேரவலம் குறித்து தமிழகத்தில் மாநாடு நடத்துவதற்கானஅனுமதியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியபோது, அதற்கான அனுமதியினை மறுத்து சென்னை காவல் கண்காணிப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தமிழீழத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒர் அரசியல் அமைப்பெனவும், இந்த அமைப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
ஈழத்தமிழர்களின் நீதி
அத்துடன் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் இந்தியாவில் நடத்தப்படும் நிகழ்வுகளின் போது விடுதலைப் புலிகளுடனான கருத்தியல் உறவை வெளிப்படுத்துவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என சென்னை காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.’
‘தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் ஆவணங்களை சமர்ப்பித்து, இந்திய மத்திய அரசிற்கு ஒத்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது பெரும்வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசானது ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்திற்கு தனது தார்மீக, அரசியல், சட்டப்பூர்வமான ஆதரவை வழங்கி இனப்படுகொலைக்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.
மேலும், 1991ம் ஆண்டு முதல் தமிழீழவிடுதலைப் புலிகள் தொடர்பில் இத்தகைய நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் தமிழக அரசு, 2009க்குப் பிறகு மாறிய அரசியல் சூழலுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டை மேம்படுத்த வேண்டும் என கோருகின்றோம்“ என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/proceedings-indian-tribunal-regarding-ban-the-ltte-1728018633

