உஸ்பெகிஸ்தான்(Uzbekistan) நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் காதலியை ஈர்ப்பதற்காக தனது உயிரை பணயம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் கடந்த ஆண்டு(2024) டிசம்பர் 17ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் லயன் தனியார் பூங்கா ஒன்று அமைந்துள்ளது.
கூண்டுக்குள் நுழைந்து காணொளி
இந்த பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பூங்காவில் பணிபுரியும் 44 வயதான எஃப்.இரிஸ்குலோவ் என்பவர், தன் காதலியைக் ஈர்ப்பதற்காக 3 சிங்கங்கள் அடைக்கப்பட்ட கூண்டுக்குள் நுழைந்து காணொளி எடுக்கிறார்.
அப்போது, சிங்கங்கள் இருக்கும் கூண்டை திறந்து, ‘சிம்பா’ என அழைத்தபடி நுழைகிறார். பின்னர், அந்த நபர் சிங்கங்களுக்கு அருகாமையில் இருப்பது காணொளியில் தெரிகிறது. தொடர்ந்து, ‘சிம்பா’ என்று அழைத்து அவற்றை அவர் கொஞ்சுகிறார்.
முதலில் ஆபத்தை உணராத அவர், அமைதியாகத் தோன்றினார். ஆனால் சிங்கங்களில் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது.
மேலும், மற்ற சிங்கங்களும் அவரை சூழ்ந்து தாக்கத் தொடங்கியது பதிவாகி உள்ளதுடன் அதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Source: https://ibctamil.com/article/lions-killed-man-after-he-enter-cage-impress-gf-1736103409

