கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வறட்சி காரணமாக அங்குள்ள கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, பல கிணறுகள் வற்றியுள்ளதால் அன்றாட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கந்தளாய் பிரதேச சபையினால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் அது தற்போதைய தேவைக்கு போதுமானதாக இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வறட்சி காரணமாக காடுகளிலுள்ள நீராதாரங்களும் வற்றியுள்ளதால், குடிநீரைத் தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, சீனிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, தற்போதைய தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதுடன், நிரந்தரத் தீர்வொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் எல் நினோ நிலைமையால் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை இம்மாத இறுதியில் குறைவடையக்கூடும் என்றாலும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எதிர்பாராத அளவுக்கு கடுமையான வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படக்கூடிய நீர்ப் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காணும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எல் நினோ தாக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின்படி, 8 மாவட்டங்களில் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 44,945 குடும்பங்கள் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு பௌசர்கள் உள்ளிட்ட வழிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் இயங்கும் 352 நீர் விநியோகத் திட்டங்களில் இரண்டு திட்டங்களில் மாத்திரமே நீர்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பல பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 24 மணிநேரமும் தொடர்ச்சியாக நீரை வழங்க முடியாத நிலை காணப்படுவதால், கட்டம் கட்டமாக நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும், களனி கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் போதுமான அளவில் காணப்படுவதால் மேல் மாகாணத்தில் நீர்விநியோகத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் ஏற்படவில்லை.
இதேவேளை, எல் நினோ நிலைமையால் கிணறுகள் உள்ளிட்ட சிறிய நீர்நிலைகள் வற்றும் அபாயம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை செப்டம்பர் மாத இறுதியில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.





