மட்டக்களப்பு – வாழைச்சேணை பகுதியில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு 750,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் கடந்த ஜூன் 4ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டது.
இதன்போது, அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தல், குறித்த உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

