முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் தம்மிடம் 30 கோடி ரூபா லஞ்சம் கோரியதாக பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான நதுன் சின்தக்க விக்ரமரட்ன எனப்படும் ஹரக் கட்டாவினால் கூறப்பட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஹரக் கட்டா ஊடகங்களிடம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
நீதிமன்றில் முன்னிலையாகி திரும்பும் போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஹரக் கட்டா தமக்கு 70 கோடி ரூபா லஞ்சம் வழங்க முயற்சித்தார் என முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/harak-katas-accustion-will-be-probed-by-tid-1747326846

